லோகாயதம்



எல்லா தத்துவ போக்குகளையும் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்று பிரித்துவிடலாம் என்றால் இந்திய தத்துவத்திலிருந்த பொருள்முதல்வாதத்தை பற்றிய ஏழு ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு Musings in Ideology என்று சொல்லலாம். மார்க்ஸிய சிந்தனையாளர் தேவிபிரசாத் சட்டோபத்யாயவின் கட்டுரைகளின் தொகுப்பு இவை. தொண்ணூற்றி ஒன்றுக்கு முன்னிருந்த கனவு இன்று இடதுசாரிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை. அந்த கனவின் சில கீற்றுகளையும் நாம் இந்த புத்தகத்தில் பார்க்கலாம்.

மேற்குலகின் எல்லா வகை விஞ்ஞானங்களின் முதல் சிந்தனையாளர் என்று தேல்ஸ் குறிப்பிடபடுகிறார். ஆனால் அவரைக் காட்டிலும் அசலான பொருள்முதல்வாத சிந்தனையாளர் உத்தலக்க அருணி. அருணியின் சிந்தனைகளை நாம் சந்தோக்யா உபநிடதத்தில் பார்க்கலாம். நாம் உட்கொள்ளும் உணவின் நுட்பமான வடிவமே நமது அறிவாகிறது. நீரின் நுட்பமான வடிவமே பிராணம்.வெப்பத்தின் நுட்பமான வடிவமே பேச்சு.இறுதியில் மரணத்தின் போது உணவு நீராக மாறி, நீர் வெப்பமாக மாறி, வெப்பம் பிரதான இருப்பில் கலந்துவிடுகிறது.ஆக நமது துவக்கம் பிரதான இருப்பிலிருந்து தான் - சத் (இருப்பிலிருந்து)தான் , அ-சத்திலிருந்து என்று சிலர் சொல்கிறார்கள் , ஆனால் அ-சத்திலிருந்து எப்படி சத் உருவாக முடியும். ஆக எப்போதும் இருப்பது சத்.ஒன்று இரண்டற்றது. அதுவே அது என்கிறார் அருணி. இங்கே தன்னுடைய கருத்துகளுக்கு மூலமாக அறிவுவாதத்தை மட்டுமே முன்வைக்காமல் அதற்கு சில உதாரணங்களை சொல்கிறார். தன் மகனை தண்ணீரில் உப்பை கரைக்க சொல்கிறார். அப்படி கரைத்த பின் அதில் எப்படி உப்பை கண்டுகொள்ள முடியவில்லையோ , ஆனால் அந்த தண்ணீரின் எல்லா தளங்களிலும் எப்படி உப்பு கலந்திருக்கிறதோ அது போல இந்த அகிலம் முழுவதும் சத்(இருப்பு) தால் ஆனது. ஒன்று இரண்டற்றது.அதுவே அது என்று தன்னுடைய விளக்கங்களை ஆய்வுகள் மூலம் நிருபிக்கிறார். அவர் இருந்திருக்கக்கூடிய காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம்.இப்படியாக எப்படி அருணி முதல் பொருள்முதல்வாதி என்று தன் ஆய்வுகளை முன்வைக்கிறார் சட்டோபத்யாய .

வேத காலத்தில் பலிபீடங்களை நிறுவுவதற்கு செங்கல்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம் சுல்வா வரைகணித நூலில் இருப்பது பற்றி தன் ஆய்வுகளை முன்வைக்கிறார். சிந்து சமவெளி காலத்தை கி.மு. 1750 எனக் கொண்டால் வேத காலம் 350 கி.மு என்று கணக்கிடப்படுகிறது. இதற்கு இடையிலான காலத்தை இருண்ட காலம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.வேத காலத்தில் சுல்வா வரைகணிதம் புதிய அறிவாக உருவாகியிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இருபதாம் நூற்றாண்டின் மத்திம காலங்களில் செய்யப்பட்ட அகழ்வராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ஹரப்பா நாகரிகத்தின் எச்சங்களை வைத்து பார்க்கும் போது அந்த நாகரிகத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த சுல்வா வரைகணித நூல் உருவாகியிருப்பதற்கான சாத்தியங்கள் பெரும் அளவு உண்டு என்று நிறுவுகிறார்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராஹமீஹிரா என்ற வானவியல் விஞ்ஞானி சூரிய கிரகணம் வருவதற்கான காரணம் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் வருவதுதான் என்றும் சந்திர கிரகணத்துக்கான காரணம் பூமியின் நிழல் சந்திரன் மேல் விழுவது தான் என்றும் எழுதியிருப்பதை முகம்மது கஜினியுடன் பெர்சியாவிலிருந்த வந்த அல்-பிருணி என்ற அறிஞர் கண்டுகொள்கிறார். அதே சமயத்தில் பிரம்மகுப்தா போன்ற அறிஞர்கள் ராகு கவ்வுவதால் உருவாவதுதான் கிரகணம் என்று தனது பிரம்மசித்தாந்தா என்ற நூலில் எழுதியிருப்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இதை ஒரு குறையாக அல்லாமல் அந்த காலகட்டத்தின் சமூகத்தை வரலாற்றில் வைத்து பார்க்கையில் சாக்ரட்டீஸூக்கு ஏற்பட்ட நெருக்கடி போல பிரம்மகுப்தாவுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் அல்-பிருணி. ஆனால் சட்டோபத்யாயா தெகார்தேவுடன் பிரம்மகுப்தாவை ஒப்பிடுகிறார். தன்னுடைய La Monde (இந்த உலகம்) என்ற நூலை எழுதி முடித்து பிரசுரத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த நிலையில் கலிலீயோவிற்கு ஏற்பட்ட நெருக்கடியை பற்றி தெரிந்துகொண்டபின் அந்த திட்டத்தை கைவிடுகிறார் தெகார்தே.அவர் இறந்த பின் 1644ல்தான் அந்த புத்தகம் வெளிவந்தது.

அதே போல பண்டைய இந்தியாவில் முற்றிலும் சமயச் சார்பற்ற விஞ்ஞான பூர்வமான துறை என்றால் அது ஆயுர்வேதம் தான்.அதிலிருந்த தாவரவியல் , விலங்கியல் , பெளதீகம், வேதயியல் போன்ற துறைகள் கிளைந்தெழுந்தன என்கிறார் சட்டோபத்யாய.சராக்கா சம்ஹிதாவும் அதன் அறுவைசிகிச்சையின் நூலாக இருக்கும் சுஸ்ரூதா சம்ஹிதாவும்
முற்றிலும் விஞ்ஞான புத்தகங்களாக விளங்குகின்றன. இவற்றின் காலம் அநேகமாக கி.மு. ஆறாம் நூற்றாண்டாக கொள்ளலாம்.ஒருவரின் பிறப்பு சார் தாழ்வும் , அவரது கஷ்டங்களும் , அவரின் வியாதிகளும் அவருடைய கர்மத்தால் விளைபவை தான் என்ற கருத்து தீவிரமாக இருந்த காலத்தில் ஆயுர்வேதம் மருத்துவத்தின் முக்கிய காரணிகளாக நான்கை கருதுகிறது.

1. மருத்துவர்
2. மருத்துவத்திற்கு தேவைப்படும் கருவிகள்
3. மருத்துவ துணையாளன்
4. நோயாளி

இங்கே கர்மாவை ஒரு காரணியாக சேர்க்கவில்லை.இயற்கையில் உடலில் சமநிலை நிலவுகிறது. அந்த சமநிலை குலையும் போது நோய் ஏற்படுகிறது.அதை மறுபடியும் சமநிலை நோக்கிய மறுசீரமைப்பே மருத்துவம். இயற்கையில் எந்த பொருளும் உபயோகமற்றதாக இல்லை என்று கருதுகிறது ஆயுர்வேதம்.எந்த அளவு இயற்கையின் நியதிகளை புரிந்துகொள்கிறோமா அந்த அளவு நோய்கள் குறித்தும் புரிந்து கொள்ளலாம். இயற்கை என்பது பஞ்சபூதங்களால் ஆனது. அதுபோலவே மனித உடலும் பஞ்சபூதங்களால் ஆனது. மனித உடலுக்கும் இயற்கைக்கும் இடையே தொடர்ந்து பாயம் நிகழ்நதவண்ணம் இருக்கிறது. இதில் பொருள் சரியான வகையில் உடலால் பெறப்பட்டால் உடல் நன்றாக இருக்கிறது. தவறான விகிதத்தில் பொருள் உடலால் பெறப்படும் போது சமநிலை குலைகிறது. அதுவே நோய் எனப்படுகிறது. இந்த உடலுக்கும் இயற்கைக்குமான தொடர்ந்த பாயத்தில் உடல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் உடல் ஒன்று போலவே இருக்கிறது என்பதை எவ்வாறு நினைக்கிறோம் என்றால் பழையதுக்கும் புதியதுக்குமான ஒப்புமையால் தான்.இந்த மாறிக்கொண்டே இருக்கும் உடலில் ஒரு கட்டத்தில் பொருட்கள் தங்களின் பிரதான நிலைக்கு திரும்புகின்றன.அதையே நாம் மரணம் என்கிறோம். அதை இயற்கைக்கு திரும்புதல் என்றும் சொல்லலாம் என்கிறது ஆயுர்வேதம்.சுஸ்ரூதா சம்ஹிதாவில் கிட்டத்தட்ட ஆயிரத்திக்கு நிகரான தாவரங்கள் பற்றியும் சராக்கா சம்ஹிதாவில் விலங்குகளின் உடலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிற நோக்கில் தொள்ளாயிர வகையான தாவரங்கள் பற்றிய ஆய்வு இருக்கிறது. இதில் ஒரு இயற்கை பண்டத்தில் உள்ள பொருள் மனித உடலின் பொருள் பொதிவில் ஏன் ஒரு வகையான தாக்கத்தை செலுத்துகிறது என்றால் ஆயுர்வேத்த்தில் அதற்கு ஒரே பதில் தான் உண்டு. அது இயற்கையின் நியதி என்பதாகும்.


ஆயுர்வேதத்தை பயிற்சி செய்த மருத்துவர்களை பற்றி எதிர்மறையான கருத்துகளே அக்காலத்து சட்ட நூல்களில் இருந்திருக்கிறது என்கிறார் சட்டோபத்யாய. மருத்துவத்தை பயிற்சி செய்தவர்கள் அசுத்தமானவர்கள் என்று சட்டநூல்கள் கூறுகின்றன.பிராமணன் மருத்துவம் பயிலக்கூடாது. பயின்றால் அவன் அசுத்தம் ஆகி தியாகத்திக்கு தகுதி இல்லாதவனாக ஆகிறான். ஏன் மருத்துவத்தை பயிற்சி செய்தவர்கள் அசுத்தமானவர்கள் என்று கருதப்பட்டார்கள் என்றால் மருத்துவ பயிற்சியில் உயர்குடிகள் அற்ற மக்களோடு கலக்க வேண்டியிருக்கும் என்று யஜூர்வேதம் கூறுகிறது. ஆயுர்வேதம் ஜனநாயக தன்மை கொண்டதாக விளங்குகையில் அதன் மருத்துவர்கள் எப்படி அசுத்தமானவர்களாக ஆகிறார்கள் என்கிற போது அதற்கான ஒரே பதில் ஆயுர்வேதம் வரணாசிரம சமூகத்திற்கு ஒத்ததாக இல்லை என்பதே. அது நோயிற்கான காரணம் கர்மா என்று சொல்லவில்லை.மாறாக பஞ்சபூதங்களாலான பொருள் பொதிவில் ஏற்படும் சமநிலை குலைவு என்று தான் சொன்னது. ஆக அது சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு உவப்பானதாக இல்லை.இந்த காரணத்தால் மிகவும் நம்பிக்கையுடன் தன் ஆரம்ப காலங்களில் தொடங்கிய ஆயுர்வேதம் காலப்போக்கில் சமய அதிகாரிகளின் சித்தாந்த காரணங்களுக்காக கிட்டத்தட்ட அழித்தேவிட்டார்கள் என்றும் அதனால் இயற்கையை அறிந்து கொள்ளக்கூடிய  ஒரு விஞ்ஞான முறையின் வளர்ச்சி தடை செய்யப்பட்டது என்றும் அதன் பாதை மாற்றப்பட்டுவிட்டது என்றும் ஆதங்கப்படுகிறார் சட்டோபத்யாய.

இன்றைய இந்தியாவிற்கான சித்தாந்த போராட்டம் பற்றி பேசுகையில் அது இரண்டு தளங்களில் நிகழ வேண்டும் என்கிறார். முதலாவது பொதுவானது.இரண்டாவது இந்திய சூழலுக்கு முக்கியமாக தேவைப்படுவது. பொதுவானது எல்லோருக்கும் மார்க்ஸிய சிந்தனை குறித்த அடிப்படைகள் பரப்புவது.இதுவே சோஷியலிச சமூகத்திற்கான வழி.
மார்க்ஸியத்திற்கு நிகரானது என்றோ சமமானது என்றோ மற்றொரு தத்துவத்தை முன்வைப்பது ஆபத்தானது என்கிறார்.அதே நேரத்தில் இந்தியா போன்ற தொன்மையான சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டிய காரியங்களும் இருக்கின்றன.இந்தியாவில் பழங்காலத்திலிருந்து வரும் தத்துவத்தின் சாரம் அதன் எழுத படிக்க தெரியாத மக்களும் அறிந்ததே.மேற்குலகத்தில் தத்துவ பிரச்சனை தத்துவவாதிகளுக்குள் நடந்த ஒரு உரையாடல்.ஆனால் இந்தியாவில் புராணங்களை கூறும் உபசாகர்கள் மூலம் தத்துவம் மக்களுக்கு சொல்லப்பட்டது. அதுவே அக்காலத்தின் ஊடகம். அத்தகைய கருத்துகள் அவர்கள் ஆழ்மனத்தில் அழுத்தமாக உள்ளது. அவர்களின் நடத்தையை அந்த எண்ணங்கள் தீர்மானிக்கிறது. ஆக நாம் இந்திய தத்துவத்தை எளிதல் புறக்கணித்துவிடமுடியாது.அதே நேரத்தில் இந்திய தத்துவத்தில் உள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள கூடாது. இன்றைய தேவைக்கு இந்திய தத்துவத்தில் எவை உயிரோடு இருக்கின்றன எவை இறந்து விட்டன என்று பிரிக்க வேண்டும். எதை வைத்து அதை முடிவு செய்ய வேண்டும் என்கிற போது கருத்துமுதல்வாத தளத்தில் பேசப்பட்டவையே இறந்து விட்டது என ஒதுக்கி பொருள்முதல்வாத தளத்தில் இயங்கிய வானயில் விஞ்ஞானம் , ஆயுர்வேதம் , கணிதம் போன்ற அறிவுவாத, சமயச் சார்பற்ற, சிந்தனைகள் குறித்து பேச வேண்டும். அந்த சிந்தனைகள் வரலாற்றில் வைத்து அவை எப்படி அந்த அனுபூதவியல் கருத்துகளுக்கும் ,வரணாசிரம கருத்துகளுக்கும் எதிராக போராடியது என்று வலியுறுத்த வேண்டும். இப்படி பேசுகையில் மக்களுக்கு அவர்களுக்கு தெரிந்த சொற்களை பயண்படுத்தி நாம் பேச முடியும்.மேலும் மார்க்ஸியம் முற்றிலும் அந்நியமான சிந்தனை இல்லை என்பதையும் நிறுவமுடியும் என முடிக்கிறார் சட்டோபத்யாயா.

இந்த மிக சிறிய நூலில் அடங்கியுள்ள கருத்துகளை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. சட்டோபத்யாய தமிழில் நன்கு அறிமுகவானவர் என தெரிகிறது.அவருடைய புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் கிடைக்கின்றன.அவருக்குள் இருக்கும் மார்க்ஸிய சமூகத்தின் கனவு அநேகமாக எல்லா கட்டுரைகளிலும் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட கட்டுரைகள் எழுதுவதற்கு எப்படிப்பட்ட உழைப்பு தேவைப்படும் என்று எண்ணிப்பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.

Musings in Ideology - Debiprasad Chattopadhyaya - Navakarnataka Publications , Bangalore.


1 comment:

prasanth said...

"இந்திய தத்துவத்தில் எவை உயிரோடு இருக்கின்றன எவை இறந்து விட்டன என்று பிரிக்க வேண்டும்"-இதை பற்றி கோவை ஞானி மிக அற்புதமாக விமர்சனம் செய்திருக்கிறார்....அதை படித்து பாருங்கள்.....உங்கள் blogஐ தொடார்தூ படித்து வருகிறேன்....மிகவும் அற்புதம்....